
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் ஸ்ரேயாஸ் ஐயர் முக்கிய பங்கு வகித்தார். ஏனெனில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 19 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடியதுடன் 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இப்போட்டியில் 36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 163.89 ஸ்ட்ரைக் ரேட்டில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 59 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் தனித்துவ சாதனை பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். அதன்படி ஒருநாள் போட்டிகளில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.