
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இத்தொடரின் முதல் பகுதியானது நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இந்திய வீரர்களுக்கான உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிவரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது மொத்தம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ள. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநில அணிகளையும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் அறிவித்து வருகின்றன. இதில் தமிழ்நாடு அணியை ஷாருக் கானும், கேரள அணியை சஞ்சு சாம்சனும் வழிநடத்தவுள்ளனர். இந்நிலையில் இத்தொடருக்கான 17 பேர் அடங்கிய மும்பை அணியை மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
அந்தவகையில் நடப்பு சீசனுக்கான சையத்முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான மும்பை அணியை ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் இந்திய அணியின் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், அதன்பின் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியை வழிநடத்தியதுடன் அந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வென்றுகொடுத்தார். இருப்பினும் அவரால் இந்திய அணிக்கு திரும்ப முடியவில்லை.