2-mdl.jpg)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதில் இந்திய அணியின் அனைத்து வீரர்களின் செயல்பாடுகளுமே காரணமாக அமைந்துள்ளது. தொடக்க வீரர் ஷுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் உள்ளிட்ட அனைவருமே பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர்.
அதேபோல் பந்துவீச்சில் முகமது ஷமி, சிராஜ், குல்தீப் யாதவ், ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட 5 வீரர்களும் எதிரணிகளுக்கு அச்சத்தை விதைத்துவிட்டனர். ஏதோ ஒரு வீரரால் இந்திய அணி வெற்றியை பெறாமல், அனைத்து வீரர்களின் உதவியுடனும் இந்திய அணி வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடுகள் ஐசிசி ஒருநாள் தரவரிசையிலும் பிரதிபலித்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 219 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் 830 புள்ளிகள் பெற்று சுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.