
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி நடத்தும் 2024 டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக நடைபெறும் இந்த தொடர் ஜூன் 1 முதல் 29 வரை நடைபெற உள்ளது. அதற்காக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி முடித்த இந்தியா அடுத்ததாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு முன் அந்த இடத்தில் நிலையான வாய்ப்புகள் பெற்று விளையாடி வந்த ரிஷப் பந்த் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். அவருக்கு பதில் வாய்ப்பு பெற்ற கேஎல் ராகுல் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார்.
இருப்பினும் அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா ஆகியோரை இத்தொடரில் தேர்வு செய்துள்ளது. ஆனாலும் இதுவரை பெரிய அளவிலான போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டிராத அவர்கள் இன்னும் தங்களை உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக நிரூபிக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால் ஒருவேளை முழுமையாக குணமடையாமல் ஒற்றைக் காலில் வந்தாலும் கேஎல் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பந்தை விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.