எனது கேப்டன்சி குறித்த முடிவை பிசிபி தான் எடுக்கும் - பாபர் ஆசாம்!
கேப்டன் பதவியில் இருந்து விலக நேரிட்டால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன். எதற்கும் பின்னால் ஒளிந்து கொள்ள மாட்டேன் என பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.
![Bharathi Kannan Bharathi Kannan](https://img.cricketnmore.com/uploads/2021/03/bk.jpg)
![T20 World Cup: Pakistan Captaincy Is Eventually PCB’s Decision, Says Babar Azam எனது கேப்டன்சி குறித்த முடிவை பிசிபி தான் எடுக்கும் - பாபர் ஆசாம்!](https://img.cricketnmore.com/uploads/2024/06/watch-Babar-Azam-got-angry-on-journalist-Azam-Khan-and-Shadab-Khan-t20-world-cup-2024-lg3-lg.jpg)
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியானது பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களைச் சேர்த்தது.
அயர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கரெத் டெலானி 31 ரன்களையும், ஜோஷுவா லிட்டில் 22 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி, இமாத் வசீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Trending
இதில் அயூப் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் தலா 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஃபகர் ஸமாம், உஸ்மான் கான், சதாப் கான் மற்றும் இமாத் வசிம் என அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய அப்பாஸ் அஃப்ரிடியும் தனது பங்கிற்கு 17 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இருப்பினும் அடுத்து வந்த ஷாஹின் அஃப்ரிடி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் பாபர் அசாம் 2 பவுண்டரிகளுடன் 32 ரன்களையும், ஷாஹீன் அஃப்ரிடி 2 சிக்சர்களுடன் 13 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணியானது 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 2 வெற்றி 2 தோல்விகளைச் சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றைக் கூட தாண்டாதது அணியின் கேப்டன் பாபர் ஆசம் மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தனது கேப்டன்சி குறித்து பேசியுள்ள பாபர் ஆசாம், “இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் தோல்விக்கு பிறகு அதற்கு பொறுப்பேற்று நான் எனது கேப்டன் பதவியை கைவிட்டடேன். ஏனெனில் அப்போது நான் அணியின் கேப்டனாக தொடரக்கூடாது என்று நினைத்தேன். அதனால் நான் எனது சொந்த முடிவாக அதனை அறிவித்தேன். ஆனால் அதன்பின் நான் மீண்டும் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது பிசிபியின் முடிவு.
நான் நாடு திரும்பியது, நடப்பு உலகக்கோப்பை தொடரில் நாங்கள் சந்தித்த தோல்விகான காரணங்கள் குறித்து அனைத்தையும் விவாதிப்போம். மேலும் கேப்டன் பதவியில் இருந்து விலக நேரிட்டால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன். எதற்கும் பின்னால் ஒளிந்து கொள்ள மாட்டேன். எது நடந்தாலும் அது வெளிப்படையாகவே நடக்கும். ஆனால் இப்போதைக்கு இதுகுறித்து நான் யோசிக்கவில்லை. ஏனெனில் இதில் முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now