
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து இப்போட்டிக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளிற்கும் இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தனர். இதனைடுத்து இன்று இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அதன்படி இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, கேல் ராகுல், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் தீவிர வலைபயிற்சியில் ஈடுப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.