
இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்கி நடைபெறவுள்ளது. இன்று கௌகாத்தியில் துவங்கவுள்ள முதல் போட்டிக்கான டாஸை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.இதனால், பவர் பிளேவில் இந்திய அணி 75/10 ரன்களை குவித்து அசத்தியது. இதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினார்கள். இந்நிலையில், கில் 70 ரன்கள் சேர்த்த நிலையில், ஷனகா பந்துவீச்சில் அவுட்டாகி நடையைக் கட்டினார். இவர் 11 பவுண்டரிகளை அடித்திருந்தார்.
தொடர்ந்து ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி வந்த நிலையில் 67 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 83 ரன்களை எடுத்து, இடது கை வேகப்பந்து வீச்சாளர் மதுஷங்கா பந்துவீச்சில் போல்ட் ஆனார். இப்போட்டியில் ரோஹித் ஷர்மா 83 ரன்களை அடித்ததன் மூலம், ஓபனராக ஒருநாள் கிரிக்கெட்டில் 7,500 ரன்களை அதிவேகமாக கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.