
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2008இல் அறிமுகமாகி கடந்த 15 வருடங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் எதிரணிக்கு சவாலை கொடுத்து வரும் அவர் 26,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்படும் அவர் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்துள்ளார். மேலும் இதுவரை 48 சதங்கள் அடித்துள்ள அவர் விரைவில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் (49 சதங்கள்) சாதனையை நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கோப்பையில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அழுத்தமான சூழ்நிலைகளில் சேஸிங் செய்வதில் சச்சின் விட அதிக ரன்கள் மற்றும் சதங்களை அடித்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் விராட் கோலி சிறந்த சேஸ் மாஸ்டராக இருப்பதாக அனைவருமே பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை இப்போதே விராட் கோலி மிஞ்சியுள்ளதாக முன்னாள் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.