
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வரும் 3ஆவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதில் நீண்ட நாட்கள் கழித்து ரோஹித் - தவான் ஜோடி ஓப்பனிங் களமிறங்கினர்.
ஆனால் அவர்களின் பார்ட்னர்ஷிப் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. வழக்கமாக தொடக்கத்தில் நிதானமாக விளையாடி, பிட்ச் -ன் தன்மையை புரிந்துக்கொண்டு பவுண்டரிகள் அடிப்பவர் ரோஹித் சர்மா. ஆனால் இந்த போட்டியில் திடீரென தொடக்கம் முதலே பவுண்டரிகளை அடித்து தள்ளினார். குறிப்பாக அல்ஸாரி ஜோசப் வீசிய 2ஆவது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார்.
இதையடுத்து 4ஆவது ஓவரை வீச வந்த ஜோசப், ரோஹித் சர்மா பவுண்டரி அடிப்பதற்காக நிறைய கட் ஷாட்களை முயற்சி செய்கிறார் என்பதை உணர்ந்துக்கொண்டார். இதனையடுத்து ரோஹித்தின் உடல் பகுதிக்கு நேராக இன் ஸ்விங் பந்தை போட, எதிர்பார்த்ததை போலவே ரோகித் சர்மா ஆர்வக்கோளாரில் உடலுக்கு வந்த பந்தை கட்ஷாட் ஆட முற்பட்டார். அப்போது பந்து இன்சைட் எட்ஜாகி மிடில் ஸ்டம்ப் காலியானது.