அனைவரும் பங்களிக்கும் ஒரு அணி எங்களிடம் உள்ளது - ஷுப்மன் கில்!
ரஷீத் போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது அது கேப்டனின் வேலையை எளிதாக்குகிறது என குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாவது தோல்வியைத் தழுவி தொடர்ந்து 7ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷீத் போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது அது கேப்டனின் வேலையை எளிதாக்குகிறது என குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “இது ஒரு நல்ல ஸ்கோர், இந்த போட்டியின் முதல் 3-4 ஓவர்கள் விளையாட எளிதாக இல்லை. சாய் சுதர்ஷன் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. அதன்பின் எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய வேலையை சிறப்பாக முடித்தனர். அதேசமயம் ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் ஒரு ஆட்ட நாயகனைத் தேர்ந்தெடுப்பதில் சிரமம் இருந்தால், அது எங்களுக்கு ஒரு நல்ல பிரச்சனை என்று நினைக்கிறேன்.
அனைவரும் பங்களிக்கும் ஒரு அணி எங்களிடம் உள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலு உங்களிடம் ரஷீத் போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது அது கேப்டனின் வேலையை எளிதாக்குகிறது” என்று தெரிவித்துள்ளார். இந்த போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன் 82 ரன்களையும், ஜோஸ் பட்லர் மற்றும் ஷாருக் கான் ஆகியோர் தலா 36 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே மற்றும் மஹீஷ் தீக்க்ஷனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய ஷிம்ரான் ஹெட்மையர் அரைசதம் கடந்ததுடன் 52 ரன்களிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, குஜராத் தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேற்கொண்டு இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சாய் சுதர்ஷன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now