
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் குசால் மெண்டிஸ், நிஷான் மதுஷ்கா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்த மதுஷ்கா 51 ரன்களிலும், சதமடித்து அசத்திய குசால் மெண்டிஸ் 101 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் அதிரடியாக விளையாடியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சரித அசலங்கா 78 ரன்களையும், ஜனித் லியானகே 32 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 281 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷுயிஸ், ஆரோன் ஹார்டி, சீன் அபோட் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷாட் 2, மெக்குர்க் 9, டிராவிஸ் ஹெட் 18, ஸ்டீவ் ஸ்மித் 29, ஜோஷ் இங்கிலிஸ் 29 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லாலகே 4 விக்கெட்டும் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.