
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை மீண்டும் இழந்துள்ள இந்தியா குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் சுமாரான பேட்டிங், பவுலிங் என்பதை தாண்டி ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் தோல்விக்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக 2ஆவது நாள் உணவு இடைவெளியில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகிய முதன்மை பவுலர்களை பயன்படுத்தாத ரோஹித் சர்மா தடுமாறிக் கொண்டிருந்த பிரசித் கிருஷ்ணா – சர்துல் தாக்கூர் ஆகியோரை பயன்படுத்தி சுமாராக கேப்டன்ஷிப் செய்ததும் தோல்விக்கு முக்கிய காரணமானது.
விராட் கோலிக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் சொந்த மண்ணில் மட்டுமே வெற்றிகளை பெறும் இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி உட்பட வெளிநாடுகளில் மோசமாக செயல்பட்டு வருவது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வீரநடை போட வைத்த விராட் கோலி ஏன் ரோஹித்துக்கு பதிலாக கேப்டனாக இருக்கக் கூடாது என முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.