
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு சீசனின் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இத்தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் 2025க்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணியின் நட்சத்திர வீராங்கனைகள் சோஃபி டிவைன், கேட் கிராஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் விலகினர். இதனையடுத்து அவர்களுக்கான மாற்று வீராங்கனைகளாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஹீதர் கிரஹாம் மற்றும் கிம் கார்த் ஆகியோரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி அந்த அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டில் காயம் காரணமாக நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்சிபி அணியின் முக்கிய வீராங்கனையாக பார்க்கப்பட்ட ஸ்ரெயங்கா பாட்டில் அந்த அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.