
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வரும் ஜூலை 06ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேசமயம் இத்தொடருக்கான சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர்களான ரியான் பார்ல், கிரேய்க் எர்வின், சீன் வில்லியம்ஸ், ஜெய்லார்ட் கும்பி உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் அதிகபடியான இளம் வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்திருப்பதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.