இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்திய இந்திய அணியானது, ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து அதிர்ச்சியளித்தது. அதிலும் இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதனையடுத்து இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, இத்தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளீட்டோரையும் பங்கேற்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Rohit and Virat Are Set To Return To Domestic Cricket Ahead Of The Test Season!#Cricket #India #TeamIndia #DuleepTrophy #RohitSharma pic.twitter.com/9Eo4F1Kk7k
— CRICKETNMORE (@cricketnmore) August 12, 2024
முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திவிட்டனர். அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கு முன் ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளர்களாக இருந்தபோது கூட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை உள்ளூர் போட்டிகளில் விளையாடியது இல்லை.
ஆனால், தற்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கவுதம் கம்பீர் அனைத்து இந்திய வீரர்களையும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுமாறு அறிவுறுத்தியுள்ளார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை தவிர்த்து ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, கே எல் ராகுல், அக்ஸர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ் போன்ற வீரர்களும் துலீப் கோப்பை தொடரில் விளையாட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.