
மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்றது. இதில் கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த இந்திய அணி அரையிறுதியில் தோற்று அதிர்ச்சி கொடுத்தது. ஆஸ்திரேலிய அணியுடனான அரையிறுதிப்போட்டியில் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது தான் இந்திய ரசிகர்களுக்கு பெரும் கவலையாக உள்ளது. இந்தியாவின் வெற்றியை பறித்தது ஹர்மன்ப்ரீத் கவுரின் விக்கெட் தான்.
இந்திய அணி 28 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது கேப்டனாக பொறுப்பாக நின்று காப்பாற்றியது ஹர்மன்ப்ரீத் தான். 34 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 52 ரன்களை குவித்திருந்தார். அப்போது கார்ட்னர் வீசிய பந்தில் 2 ரன்கள் ஓட நினைத்து துரதிஷ்டவசமாக நூலிழையில் ரன் அவுட்டானார். இதன் பின்னர் தான் இந்தியாவின் நம்பிக்கையே உடைந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் எம்எஸ் தோனியும் இதே போன்ற முறையில் தான் ரன் அவுட்டானார். அதன்பின்னர் இந்தியா தோற்றது. தற்போது ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் நடந்ததுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், துரதிஷ்டவசமான அவுட் இது, நான் எதிர்பார்க்கவே இல்லை என்பது போல விளக்கம் அளித்திருந்தார்.