
India vs England 2nd Test: பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்ததுடன் 269 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் ஷுப்மன் கில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த உலகின் மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் மெற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் மட்டுமே இந்த சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.