
இந்திய கிரிக்கெட்டில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தற்காலத்தில் வேகப் பந்துவீச்சுதுறை மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. கேப்டனாக விராட் கோலி மற்றும் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்த காலகட்டத்தில் இருந்து இந்தநிலை தொடர்கிறது. தற்பொழுது நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்ற ஆறு அணிகளில், வேகப்பந்துவீச்சாளர்களின் தொழிற்சாலை என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் அணியை விட, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மிகச்சிறப்பாக இருந்தது.
இந்திய வேகப்பந்துவீச்சாளர்களிடம் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகம் கிடையாது. சராசரியாக 140 கிலோ மீட்டர் என்கின்ற அளவில்தான் வீசுகிறார்கள். ஆனால் அவர்கள் கையில் இருக்கும் வித்தை என்பது அபாரமானதாக இருக்கிறது. அவர்களின் துல்லியமும் புத்திசாலித்தனமும் சிறப்பாக இருக்கிறது. இந்த இடத்தில்தான் மற்ற அணிகளின் வேகப்பந்துவீச்சாளர்களை விட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தனித்து தெரிகிறார்கள். இதன் காரணமாகவே தற்பொழுது இந்திய அணி எந்த நாட்டிற்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட சென்றாலும் வெல்ல முடியும் என்கின்ற சூழல் உருவாகி இருக்கிறது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், இந்தியா அணியின் முகமது சிராஜ் முதல் இடத்தில் இருந்தார். இதற்கடுத்து தற்பொழுது மீண்டும் அவர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக வெளிப்படுத்திய அபார பந்துவீச்சின் மூலம் மீண்டும் முதலிடத்தை பிடித்திருக்கிறார். அதே சமயத்தில் காயத்தில் இருந்து திரும்ப வந்த இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, தன்னுடைய பழைய பவுலிங் ஃபார்முக்கு உடனடியாக திரும்பி இருக்கிறார்.