
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் ரன்னே அடிக்காமல் மிட்செல் ஸ்டார்க்கின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரோஹித் சர்மா(13), சூர்யகுமார் யாதவ்(0), கேஎல் ராகுல் (9) ஆகியோரும் மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் வீழ்ந்தனர். இதில் சூர்யகுமார் யாதவ் முதல் போட்டியிலும் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார்.
இந்திய அணியின் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு, குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரிய சிக்கல் இருக்கிறது. உலக கோப்பையை எதிர்கொள்ளும் இந்திய அணி இந்த பிரச்னையை சரி செய்தாக வேண்டும். ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழக்க நிலைத்து நின்று விளையாடிய விராட் கோலியும் 31 ரன்கள் அடித்த நிலையில் சீன் அபாட்டின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.