
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றுவருகிறது. மேலும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க ஒருசில நாள்களே உள்ள நிலையில், இத்தொடர் அதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதன்படி மொஹாலியில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் இணைந்த ஷுப்மன் கில் - ஸ்ரேயாஸ் ஐயர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக தொடங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, அவரைத்தொடர்ந்து அதிரடி காட்டிய ஷுப்மன் கில்லும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.