
வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்று தொடங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி நேற்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையிலும், இறுதியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 376 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இதில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் ஷாத்மன் இஸ்லாம் 2 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து ஸாகிர் ஹசன் 3 ரன்களிலும், அடுத்து வந்த மொமினுல் ஹக் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஓரளவு தாக்குப்பிடித்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 20 ரன்களிலும், முஷ்ஃபீகூர் ரஹீம் 8 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் இணைந்த ஷாகிப் அல் ஹசன் - லிட்டன் தாஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர்.