டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்துள்ளார்

ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் இத்தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக செயல்படுவாரா, குல்தீப் யாதவிற்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா, கருண் நாயர் டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுப்பாரா என பல்வேறு கேள்விகளுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.
மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இளம் வீரர் ஒருவரை அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என்ற பேச்சுவார்த்தையில் பிசிசிஐ ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. ஏனெனில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களை இழந்ததால் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானார். அதுமட்டுமில்லாமல் அவரது பேட்டிங் ஃபார்மும் கேள்விக்குள்ளானது.
இந்நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில் “அனைவருக்கும் வணக்கம், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது நாட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரதிநிதித்துவப்படுத்துவது எப்போது ஒரு முழுமையான மரியாதை.
மேலும் பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்து அன்புக்காட்டிய அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேசமயம் நான் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணிக்காக கடந்த 2013ஆம் ஆண்டு அறிமுகமான ரோஹித் சர்மா இதுநாள் வரையிலும் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4301 ரன்களைக் குவித்துள்ளர். இதில் 18 அரைசதங்களும், 12 சதங்களும் அடங்கும்.
India captain Rohit Sharma has retired from Test cricket! pic.twitter.com/m8EZTzCY5E
— CRICKETNMORE (@cricketnmore) May 7, 2025
மேற்கொண்டு விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து ரோஹித் சர்மாவுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அவர் தலைமையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையிலும் அதில் தோல்வியைத் தழுவியது. அதன்பின் சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியானது அடுத்தடுத்து தோல்விகளைத் தழுவியதுடன், ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்மும் பெரும் விமர்சனங்களைச் சந்திதது.
Also Read: LIVE Cricket Score
இதன் காரணமாகவே ரோஹித் சர்மா தற்சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. அதேசமயம் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதை அடுத்து இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now