
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையோடு விராட் கோலி இந்திய டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதற்கு அடுத்து இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு தனித்தனி கேப்டன்களை நியமிக்க முடியாது என்று கூறி இந்திய கிரிக்கெட் வாரியம் அவரிடம் இருந்த இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியையும் பறித்தது!
இதன் பின்னால் ரோஹித் சர்மா வெள்ளைப்பந்து இந்திய அணிக்கான கேப்டனாக பொறுப்பேற்க புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வந்தார். மேலும் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழக்க விராட் கோலி இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியையும் துறந்தார். அடுத்து ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணிக்கான மூன்று வடிவத்திலும் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையில் இந்திய அணி உள்நாட்டில் மிகப்பெரிய வெற்றிகளை தொடர்ந்து குவித்து வருகிறது.
அதே சமயத்தில் உடல் தகுதி பெரிய அளவில் இல்லாததால் அடிக்கடி காயத்தில் சிக்கும் ரோஹித் சர்மா அணிக்கு வெளியே இருக்க வேண்டிய நிலைமையும் வருகிறது. இதுகுறித்து தற்போது பார்டர் கவாஸ்கர் கோப்பையில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிகழ்வில் ரோஹித் சர்மாவின் உடல் தகுதி பற்றி கபில் தேவ இடம் கேட்ட பொழுது அதற்கு அவர் “பிட்டாக இருப்பது மிகவும் அவசியம். மேலும் ஒரு கேப்டன் பிட்டாக இல்லை என்றால் அது அவமானம். ரோஹித் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்” என்று மிகவும் கடுமையாக கூறியிருக்கிறார்.