4th Test: சதமடித்து அசத்திய ஜடேஜா, வாஷிங்டன்; போட்டியை டிரா செய்தது இந்தியா!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்துள்ளது.

Manchester Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அகியோர் சதமடித்து அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுத்தனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 61 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 54 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜாக் கிரௌலி 84 ரன்களுக்கும், பென் டக்கெட் 94 ரன்களுக்கும், ஒல்லி போப் 71 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இணை ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் சதமடித்து அசத்திய நிலையில் ஜோ ரூட் 150 ரன்களுக்கும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர் இதன் காரணமாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் முதல் ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்று அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்து அசத்தினர். இதில் இருவரும் இணைந்து 188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கேஎல் ராகுல் 90 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடித்து அசத்திய ஷுப்மன் கில் 103 ரன்களை சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் தொடர்ந்து அபாரமாக விளையாடியதன் மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது. மேற்கொண்டு ரவீந்திர ஜடேஜா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தியும், வாஷிங்டன் சுந்தர் தனது முதல் டெஸ்ட் சதத்தையும் பதிவுசெய்தனர். இதன்மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்களைச் சேர்த்த நிலையில் இரு அணி வீரர்களும் போட்டியை முடித்துக்கொண்டனர்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 107 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்களையும் சேர்த்திருந்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now