
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் புதிய டெஸ்ட் கேப்டனைத் தேர்வு செய்யும் வேலைகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இறங்கியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியானது எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதனால் இத்தொடருக்கு முன்னர் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. மேலும் கேப்டனுக்கான தேர்வில் ஷுப்மன் கில், கேஎல் ராகுல், ஜாஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோருக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் அல்லது துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு அனைத்து போட்டிகளுக்கும் தயாராக இருக்கும் வீரருக்கு கேப்டன் பதவியை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பும்ரா டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.