
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் இந்திய அணி எடுத்தது.
இதை அடுத்து மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி அதிரடியாக விளையாடியது. ரோஹித் சர்மா 58 பந்துகளை எதிர்கொண்டு 35 ரன்கள் அடித்தார். இதில் மூன்று பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக சொந்த மண்ணில் 2000 ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அசாருதீன் 33 இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டிய நிலையில் ரோஹித் சர்மா 36 இன்னிங்ஸில் 2000 ரன்களை தொட்டிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 38 இன்னிங்ஸிலும், விராட் கோலி 39 இன்னிங்சிலும், டிராவிட் 40 இன்னிங்சிலும் இந்த மைல் கல்லை தொட்ட நிலையில் ரோகித் சர்மா அவர்களை பின்னுக்கு தள்ளியுள்ளார்.