
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவதும் பேட்டிங்கில் அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில் இப்போட்டிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்பது அவரிடம் நீங்கள் எப்போது ஓய்வை அறிவிப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, “காலையில் எழுந்ததும் எப்போது எனது ஆட்டம் போதுமானதல்ல என்று தோன்றுகிறதோ, அன்றைய நாளில் உடனடியாக ஓய்வை அறிவித்துவிடுவேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் எனது ஆட்டத்தை மெருகேற்றி இருக்கிறேன். என் வாழ்வின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருவதாக உணர்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மாவின் இந்த கருத்து ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்பது தெளிவாகிறது. கடந்த காலங்களில் சில ஆண்டுகளாக இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்தி வரும் நிலையில், டி20 உலகக்கோப்பை, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் கோப்பையை வெல்லமுடியாமல் தோல்வியைத் தழுவியுள்ளது.