
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி நவம்பர் 08ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முடிவடையவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி டர்பனிலும், இரண்டாவது போட்டி க்கெபெர்ஹாவிலும், மூன்றாவது போட்டி செஞ்சூரியனிலும், நான்காவது போட்டி ஜொஹன்னஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இத்தொடருக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களான ரமந்தீப் சிங், வைஷாக் விஜயகுமார், யாஷ் தயாள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆவேஷ் கான், அக்ஸர் படேல் உள்ளிட்டோரும் இந்திய டி20 அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஐடன் மார்க்ரம் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், மார்கோ ஜான்சென் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்டோர் மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ளனர். மேற்கொண்டு அறிமுக வீரர்களான மிஹ்லலி மபோங்வானா, ஆண்டிலே சிமெலேன் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ள நிலையில், காகிசோ ரபாடா மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.