
இந்திய அணி தனது தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் நாளை மறுநாள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடுகிறது. டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்கிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் டி20 தொடரில் விளையாடுகிறார்.
மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நான்காவது போட்டிக்கு திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர் இந்த முறை மூன்று போட்டிக்குமான இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார். இவர்கள் இருவரும் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் காரணமாக, இந்திய பேட்டிங் வரிசை எப்படி அமைக்கப்படும் என்பது சுவாரசியமான ஒன்றாக இருக்கும்.
மேலும் இந்த டி20 தொடரில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரன் மெஷின் விராட் கோலி இருவரும் விளையாட விரும்பவில்லை என்பதாக கூறப்பட்டது. அதேசமயத்தில் இவர்கள் இருவரையும் மேற்கொண்டு இந்திய டி20 அணியில் வைத்திருக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விரும்பவில்லை என்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.