
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் அந்நாட்டில் 13 வருடங்கள் இந்தியா சமன் செய்து சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து நாடு திரும்புயுள்ள இந்திய அணியினர் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக அடுத்ததாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளனர்.
இருப்பினும் இந்தத் தொடரில் கேப்டனாக இருக்கப் போவது யார், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா என்ற கேள்வி ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் கடந்த டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த சீனியர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
மேலும் டி20 கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு மிகவும் வேகமாக ஓடி துடிதுடிப்பாக ஃபீல்டிங் செய்வது அவசியமாக பார்க்கப்படுகிறது. அதனால் 2007க்குப்பின் டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வரும் கதையை நிறுத்த இம்முறை இளம் வீரர்களை பிசிசிஐ களமிறக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால் இளம் வீரர்களால் மட்டும் சாதித்து விட முடியாது என்பதால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது அவசியம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.