
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியானது இன்று வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இந்திய டெஸ்ட் அணியின் ஜாம்பவான் பேட்டரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். முன்னதாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும், ஆனால் பிசிசிஐ அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் படியும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. இருப்பினும் இன்றைய தினம் விராட் கோலி சமூக வலைதள பதிவின் மூலம் தனது டெஸ்ட் ஓய்வை அறிவித்துள்ளார்.