
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று ஹராரேவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பெட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு மருமணி - மதேவெரா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 32 ரன்கள் எடுத்த நிலையில் மருமணி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து வெஸ்லி மதேவெராவும் 25 ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ரஸா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் அதேசமயம் மறுபக்கம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரையன் பென்னட் 9 ரன்களுக்கும், ஜானதன் காம்பெல் 3 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர்.
அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடிய சிக்கந்தர் ரஸா 28 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 46 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தியான் மேயர்ஸ் 12 ரன்களுக்கும், கிளைவ் மடாண்டே 7 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.