
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டியானது இன்று ஹராரேவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ரஸா 46 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வல் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 93 ரன்களையும், கேப்டன் ஷுப்மன் கில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 58 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 15.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி சில சாதனைகளையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அந்தவகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 ரன்களுக்கு அதிகமாக இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டிய நான்காவது அணி எனும் சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியானது கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 200 ரன்கள் என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டி முதலிடத்தில் தொடர்கிறது.