
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி தேர்வு குறித்து ஒரு குழப்பம் தான் இருந்தது. அதாவது, இதற்கு முந்தைய ஒருநாள் தொடரில் ஒரு இரட்டைசதம் மற்றும் சதமடித்து டாப் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்கப்படுவாரா அல்லது கேஎல் ராகுல் இறக்கப்படுவாரா என்பதுதான் அந்த கேள்வி.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கேஎல் ராகுல் தான் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். அவர்தான் துணை கேப்டனும் கூட. அதனால் அவர் புறக்கணிக்கப்படவில்லை. ஆனால் முதல் டெஸ்ட்டில் வெறும் 20 ரன்கள் மட்டுமே அடித்து சொதப்பினார் ராகுல். இதையடுத்து அவர் கடும் விமர்சனத்துக்குள்ளானார். ராகுலை கடுமையாக விமர்சித்தது, முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தான். ராகுல் தொடர்ச்சியாக சொதப்பியும் அவருக்கு அளவுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும், அவரை டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமித்ததே தவறு என்றும், ஷுப்மன் கில் மற்றும் சர்ஃபராஸ் கான் மாதிரியான வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ராகுலுக்கு தொடர் வாய்ப்பளிப்பதாக விமர்சித்திருந்தார் வெங்கடேஷ் பிரசாத்.
அதேபோல் 2ஆவது டெஸ்ட்டிலும் ராகுல் வெறும் 17 மற்றும் ஒரு ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 2022 லிருந்து டெஸ்ட்டில் ராகுலின் சராசரி வெறும் 17.4 ஆகும். 2022லிருந்து டெஸ்ட்டில் ஒரு தொடக்க வீரரின் குறைந்தபட்ச சராசரி இதுதான். அதை சுட்டிக்காட்டி மீண்டும் மிகக்கடுமையாக விமர்சித்திருந்தார் வெங்கடேஷ் பிரசாத். ராகுலை 2வது டெஸ்ட்டில் ஆடவைக்கக்கூடாது என்று பலரும் விமர்சித்த நிலையில், ராகுலை நீக்குவதற்கு முன் இன்னுமொரு போட்டியில் வாய்ப்பளிக்கலாம் என்று கவாஸ்கர் கூறியிருந்தார்.