பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

Advertisement

அதன்படி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சில சாதனைகளையும் படைத்துள்ளது. 

ஒரு மைதானத்தில் தோல்வியடையாமல் அதிக வெற்றிகள்

ஒரு மைதானத்தில் தோல்வியடையாமல் அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் இந்திய அணி கூட்டாக முதலிடத்தை எட்டியுள்ளது. அதன்படி துபாய் மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ள 11 ஒருநாள் போட்டிகளில் ஒரு முறை கூட தோல்வியைத் தழுவாமல், 10 வெற்றி பெற்று, ஒரு முடிவில்லை என ஆதிக்கத்தை செய்லுத்தியுள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து அணி டுனெடினில் விளையாடிய 10 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவாமல் வெற்றியைப் பதிவுசெய்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது இந்திய அணி அதனை சமன்செய்துள்ளது.

ஒரு மைதானத்தில் தோற்காமல் அதிக வெற்றிகள்

  • 10 - இந்தியா, துபாய் (11 போட்டிகள், 1 முடிவில்லை)
  • 10 - நியூசிலாந்து, டுனெடின்
  • 7 - இந்தியா, இந்தூர்
  • 7 - பாகிஸ்தான், ஹைதராபாத் (பாகிஸ்தான்)

அதிக ஓவர்களை வீசிய சுழற்பந்து வீச்சளர்கள்

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இந்த இறுதிப் போட்டியில் மொத்தம் 99 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், அதில் 73 ஓவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களால் மட்டுமே வீசப்பட்டன. இதன்மூலம் ஐசிசி ஒருநாள் தொடர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக ஓவர்களை வீசிய போட்டியாகவும் இது அமைந்துள்ளது. முன்னதாக நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டத்தில் 65.1 ஓவர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசியது குறிப்பிடத்தக்கது. 

முதல் அணி

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக முறை பட்டத்தை வென்ற அணி எனும் சாதனையையும் படைத்துள்ளது. இந்திய அணி இதற்கு முன் கடந்த 2002 மற்றும் 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றுள்ளது. இதில் 2002ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இலங்கை அணியுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி குறித்து பேசினால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் டேரில் மிட்செல் 63 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெ ல் 53 ரன்களையும் சேர்க்க, ரச்சின் ரவீந்திரா 37 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 34 ரன்களையும் சேர்த்தததன் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்தது.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 76 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News