prabhsimran singh
ஐபிஎல் 2024: பிரப்ஷிம்ரன், ரூஸோவ் அதிரடி; சன்ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதில் இன்று நடைபெற்ற 69ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் - அதர்வா டைடே இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளையும் விளாசித்தள்ளினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் தொடர்ந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அதர்வா டைடே அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 46 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய பிரப்ஷிம்ரன் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.