Asia cup 2023
அதிர்ஷ்டவசமாக இந்த ஆட்டம் எங்களுக்கு இறுதிப் போட்டி இல்லை - ஷுப்மன் கில்!
இந்திய அணி நேற்று ஆசியக்கோப்பை இரண்டாவது சுற்றுக் கடைசிப் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக விறுவிறுப்பான போட்டியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி எந்தவித தாக்கத்தையும் தொடரில் ஏற்படுத்தாது. நேற்று வங்கதெச அணி எட்டு விக்கெட் இழப்புக்கு முதலில் விளையாடி 265 ரன்கள் சேர்த்தது. இந்த இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
இந்த நிலையில் இறுதி கட்டத்தில் வந்த அக்சர் படேல் தவிர, ஒரு முனையில் நிலைத்து நின்ற ஷுப்மன் கில்லுக்கு நல்ல ஒத்துழைப்பு தரவில்லை. ஆனாலும் அவர் தனி ஒரு வீரராக போராடி அணியை இலக்கை நோக்கி கொண்டு வந்தார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 133 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 121 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த பந்தை அடித்திருக்க தேவையில்லை என்கிற சூழல்தான் இருந்தது. ஆனால் அனுபவக் குறைவால் அவர் ஆட்டம் இழக்க அது அணியின் வெற்றியை பாதித்து விட்டது.