Dinesh karthik
பெரிய விஷயங்கள் காத்திருக்கின்றன - சாதனை படைத்த ஜெகதீசனுக்கு தினேஷ் கார்த்திக் வாழ்த்து!
இந்தியாவின் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான 2022 விஜய் ஹசாரே கோப்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அருணாச்சல பிரதேசத்தை எதிர்கொண்ட தமிழகம் ஏராளமான உலக சாதனைகளை படைத்தது. பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சரவெடியாக செயல்பட்டு 506/2 ரன்களை குவித்தது. அதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 500 ரன்கள் கடந்த முதல் அணி மற்றும் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற இரட்டை உலக சாதனைகளை படைத்த தமிழ்நாடு உலகை திரும்பி பார்க்க வைத்தது.
அதற்கு 416 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த நாராயண ஜெகதீசன் – சாய் சுதர்சன் ஆகியோர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 400 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி மற்றும் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஜோடி என்ற இரட்டை உலக சாதனைகளை படைத்தனர். அதில் சாய் சுதர்சன் 154 ரன்கள் எடுத்த நிலையில் 277 ரன்களை விளாசிய நாராயண் ஜெகதீசன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த பேட்ஸ்மேன் மற்றும் அதிவேகமாக (114 பந்துகள்) இரட்டை சதமடித்த பேட்ஸ்மேன் ஆகிய 2 உலக சாதனைகளை படைத்தார்